அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. தொற்றுக்குள்ளானதை அடுத்து அவா் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்து வருவதாக வெள்ளை மாளிகை நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தொற்றுக்குள்ளான ஓ பிரையன் சமீபத்தில் தன்னைச் சந்திக்கவில்லை என வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ட்ரம்ப் கூறினார்.
54 வயதான ஓ'பிரையன் கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் தனது அலுவலகத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவா் அலுவலகத்திற்கு வெளியே இருந்துவந்ததாக ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குடும்ப நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஓ' தொற்றுக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனைவிட ஓ'பிரையன் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். இங்கிலாந்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அதிகாரிகளை அவர் சந்தித்தார்.
இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் ஓ'பிரையன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததுடன், முககவசங்களை அணியாமல் இருந்ததைக் காண முடிந்தது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா